search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருமண தடை பரிகாரம்"

    • அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம்.
    • திருமணத்தடை, தொழிலில் நசிவு என அனைத்தும் விலகி நலம் பெறலாம்.

    தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. புராண காலத்தில் தேவர்களும், அவர்கள் தலைவனான இந்திரனும் இத்தலத்திற்கு வந்து இறைவனை வணங்கினர். அப்போது அக்னிதேவன் தான் தொட்ட பொருட்கள் யாவும் சுட்டெரிக்கப்பட்டு நாசமாகி விடுகிறதென்றும் அதனால் ஏற்படும் பழியிலிருந்து விடுபட வழி சொல்ல வேண்டுமென்றும் இறைவனிடம் முறையிட்டான். இறைவன் சிவன் அக்னிதேவன் முன் தோன்றி இத்தலத்தில் ஒரு குளம் அமைத்து அதற்கு அக்னி தீர்த்தம் என்று பெயரிட்டு அந்த குளத்து நீரைக்கொண்டு தன்னை அபிஷேகம் செய்தால் என்னை வழிபடும் உனக்கு அந்தப் பழி தீரும் என்றும் அதில் நீராடும் பக்தர்களுக்கும் அவர்கள் செய்த பாவங்கள் தீரும் என்றும் வரமளித்தார். இந்த தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு, மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதலிய நாள்களில் நீராடி வழிபடுவோர் எல்லா நலன்களும் பெறுவர்.

    இங்கேயுள்ள ஈசனுக்கு தீயாடிப்பர், அழலாடியப்பர், வன்னிவன நாதர், அக்னீஸ்வரர் என்றும், அம்பாளுக்கு அழகர்மங்கை, வார் கொண்ட முலையாள், சவுந்தரநாயகி என்றும் பெயர்கள் உண்டு. இங்கே, பங்குனி உத்திரத் திருநாள் விசேஷம்! இந்த நாளில், அக்னித் தீர்த்தத்தில் (குளம் தற்போது கிணறாகி விட்டது) நீராடி, ஸ்ரீஅக்னீஸ்வரரை வழிபட்டால், இம்மையில் எல்லாச் செல்வங்களும் மறுமையில் நற்பிறப்பும் பெற்று, அனைத்துப் பாவங்களும் நீங்கப் பெறலாம் என்பது ஐதீகம்.

    இங்குள்ள ஸ்ரீயோக தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் நெய் தீபமேற்றி, முல்லை மலர்களால் அர்ச்சித்து வழிபட கல்வித் தடை, திருமணத்தடை, தொழிலில் நசிவு என அனைத்தும் விலகி நலம் பெறலாம்.

    பங்குனியில் பத்து நாள் பிரம்மோத்ஸவம் விமரிசையாக நடை பெறுகிறது. உத்திர நாளில் பஞ்சமூர்த்தி புறப்பாடு, காவிரியில் தீர்த்தவாரி என அமர்க்களப்படும். பத்து நாட்களும், சுவாமியும் அம்பாளும் திருவீதியுலா வருவதைக் காணக் கண்கோடி வேண்டும். இந்த நாளில் தரிசித்து வணங்கினால், விரைவில் கல்யாண மாலை உறுதி என்கின்றனர், பக்தர்கள்.

    • ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.
    • பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும்

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் ஒரு சிறிய குன்றின் மீது, நெடிய ராஜகோபுரத்துடன் விளங்குகிறது. பசுமையான மரங்கள் சூழ்ந்து இருப்பதால், தூரத்திலிருந்து பார்க்கும்போது அந்த குன்று ஒரு மயில் தோகை விரித்திருப்பது போல் அழகாகக் காட்சியளிக்கிறது.

    கோபுரமானது மயிலின் கொண்டை போல உச்சியில் இருக்கிறது. கோவிலைப் போலவே இந்த மலையையும் புனித மாகக் கருதி பக்தர்கள் வழி படுகிறார்கள். முருகப்பெருமானால் போரில் சூரபத்மன் தோற் கடிக்கப்பட்டான் அவன் மனம் திருந்தி, இறையருள் வேண்டி... மயிலம் வந்து மயில் வடிவ மலையாக மாறி கடும் தவம் புரிந்தான். தவத்தில் மகிழ்ந்து முருகன் அவனுக்கு காட்சி தந்தார். அப்போது ''என்னை தங்கள் வாகனமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்!'' என முருகனிடம் சூரபத்மன் வேண்டினான்.

    மேலும் ''மயில் வடிவ மலையாக இருந்து நான் தவம் புரிந்த இந்த மலைக்கு 'மயூராசலம்' எனப் பெயர் வழங்க வேண்டும். தாங்கள் எந்த நாளும் இங்கு வீற்றிருந்து அன் பர்களுக்கு அருள் புரிய வேண்டும்!'' என்றும் கோரிக்கை வைத்தான். உடனே முருகன் அவனிடம் ''எதிர் காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு தவம் புரிவார். அப்போது உன் விருப்பம் நிறைவேறும்!'' என்று கூறிவிட்டு மறைந்தார். சூரபத்மன், அதுவரை மலையாக நிலை கொண்டு அங்கு காத்திருந்தான். 'மயூரா சலம்' என்ற இந்தப் பெயரே பின்னர் மயிலம் என்று மருவியது என்கிறார்கள்.

    இந்த கோவிலில் உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பதால், ஒவ்வொரு செவ்வாயிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள். எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும்.

    இந்த கோவிலில் பங்குனி உத்திரம் 12 நாட்கள் பிரம்மோற்சவமாக விமரிசையாக நடக்கிறது. இந்த நாட்களில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராமாள பக்தர்கள் வந்து செல்கிறார்கள்.

    • சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.
    • பங்குனி அமாவாசை அன்று மூலை அனுமாரை மீன ராசியில் பிறந்தவர்கள் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.

    தஞ்சை மேலவீதியில் மூலை அனுமார் கோவில் உள்ளது. புகழ்பெற்ற இந்த கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு லட்சம் ராம நாமம் ஜெபமும், அதைத்தொடர்ந்து காலை10 மணிக்கு வறுமை மற்றும் கடன் தொல்லைகளை நிவர்த்தியாக்கும் தேங்காய் துருவல் அபிஷேகம் மற்றும் சிறப்பு பாலாபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு வடை மாலைகளாலான சிறப்பு அலங்காரமும், 6.30 மணிக்கு முகூர்த்த அர்ச்சனையும் நடைபெறுகிறது. அந்த சமயம் திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மூலை அனுமாருக்கு குங்குமம், மஞ்சள், செந்தூரம் கொண்டு வந்து தந்து முகூர்த்த அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

    இதைத்தொடர்ந்து கோவிலை 18 முறை வலம் வரும் நிகழ்ச்சியும், 1008 எலுமிச்சை பழங்களால் ஆன மாலையை சாற்றி தீபாராதனையும் நடைபெறுகிறது. பங்குனி அமாவாசை அன்று மூலை அனுமாரை மீன ராசியில் பிறந்தவர்கள் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது ஆகும். அமாவாசை சிறப்பு வழிபாட்டிற்காக ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் உதவி ஆணையர் கவிதா மற்றும் அமாவாசை வழிபாட்டு குழுவினர் செய்து வருகின்றனர்.

    • துர்க்கை அம்மன் வழிபாட்டில் பக்தர்கள் அதிக ஈடுபாடு காட்டுகிறாா்கள்.
    • சிவகாமசுந்தரியை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும்.

    நந்திவர்ம பல்லவன் என்னும் மூன்றாம் நந்திவர்மனின் மகனான நிருபதுங்க பல்லவன் தன் பெயரால் நிருபகேஸ்வரி ஈஸ்வரம் என்று முற்காலத்தில் அழைக்கப்பட்ட சிவாலயம் தற்போது பசுபதீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. கோவிலின் அம்மன் சிவகாமசுந்தரி. இக்கோவிலில் விநாயக பெருமான், துர்க்கை, முருகன் ஆகிய சாமிகளும் உள்ளனர்.

    இக்கோவிலில் உள்ள பசுபதீஸ்வரரை வணங்கி அர்ச்சனை செய்து வழிபட வளம் பெருகி திருமணத்தடை நீங்கும் என்று கூறப்படுகிறது. கோவிலில் உள்ள அம்மன் சிவகாம சுந்தரியை வணங்கினால் குடும்பத்தில் நன்மை கிடைக்கும் என்று வழி, வழியாக வந்த செய்திகள் தெரிவிக்கின்றன.

    பிரதோஷ நாட்களில் நந்தியெம்பெருமானையும் சிவகாமசுந்தரியையும் வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்று கூறுகின்றனர்.

    துர்க்கை அம்மனை முறைப்படி வழிபட்டால் நமது வாழ்வில் உள்ள தீமையான கால கட்டம் விரைவில் அகன்று புதிய நல்வாழ்வு கிடைக்கும் என பக்தர்கள் நம்புவதால் துர்க்கை அம்மன் வழிபாட்டில் பக்தர்கள் இன்றும் அதிக ஈடுபாடு காட்டுகிறாா்கள்.

    துன்பங்களை போக்கும் துா்க்கை அம்மனுக்கு மாலை அணிவித்து வழிபட்டால் நீங்காத துயரால் அவதிப்படுபவர்களுக்கு விரைவில் நல்வாழ்வு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

    மேலும் மாறனேரி பசுபதீஸ்வரர் கோவிலில் உள்ள நவக்கிரக சன்னதியை முறையாக வழிபடுவோருக்கு விரைவில் நவக்கிரக தோஷம் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

    பிரதோஷ நாளில் இந்த கோவிலில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொண்டால் குடும்பத்தில் உள்ள தீமைகள் அகன்று கண்டிப்பாக நம் வாழ்வில் நன்மை பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும்.

    சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து பஸ் அல்லது ெரயில் மூலம் தஞ்சைக்கு வந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து பூதலூர் வழியாக திருக்காட்டுப்பள்ளிக்கு சென்று அங்கிருந்து ஆட்டோ அல்லது வாடகை கார் மூலம் கோவிலுக்கு செல்லலாம். தென் மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் தஞ்சைக்கு வந்து மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம்.

    • இந்தக் கோவிலை அங்குள்ள மக்கள் ‘பவுர்ணமி கோவில்’ என்றும் அழைப்பது உண்டு.
    • ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 90 நாளில் திருமணம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

    தஞ்சாவூர் மாவட்டம் பள்ளியூரில் அமைந்துள்ளது, ஆதிவீரமாகாளியம்மன் கோவில். இந்தக் கோவிலை அங்குள்ள மக்கள் 'பவுர்ணமி கோவில்' என்றும் அழைப்பது உண்டு.

    இந்தக் கோவில் பஞ்சபூதங்களையும் தன்னகத்தே கொண்டது. கோவில் முன்பு குளம் உள்ளது. குளத்தின் கரையில் விநாயகர் சன்னிதியும் உள்ளது. இந்தக் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தால் எண்ணங்கள் ஈடேறும் என்கிறார்கள். குறிப்பாக குழந்தை இல்லாதவர்கள், திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து தரிசனம் செய்தால் குழந்தைப் பேறு கிட்டும், திருமணம் நடக்கும் என்பது ஐதீகம். குழந்தை இல்லாதவர்கள் இந்த கோவிலுக்கு 3பவுர்ணமி வந்து தரிசனம் செய்ய வேண்டும். தேங்காய், வெற்றிலை, பாக்கு போன்றவை எடுத்து வர வேண்டும்.

    3-வது பவுர்ணமி அன்று அவர்கள் கோவிலுக்கு வரும் போது ஆண், பெண் உருவம் கொண்ட 2 மரப்பாச்சி (மரத்தினால் செய்யப்பட்டது) பொம்மைகளை எடுத்து வர வேண்டும். அதில் ஒரு பொம்மையை கோவிலில் வைத்து விட்டு ஒரு பொம்மை, கொண்டு வந்தவர்களிடம் கொடுக்கப்படுகிறது. அவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு கிட்டுகிறது. அதன்படி இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்டவர்களுக்கு குழந்தை பேறு கிடைத்துள்ளது. இதே போல் திருமணம் ஆகாதவர்கள், தங்கள் ஜாதகத்தின் நகல்களின் 2 பிரதிகளை இந்த கோவிலுக்கு கொண்டு வர வேண்டும். அதனை அம்மன் பாதத்தில் வைத்து விட்டு ஒன்றை அங்கு வைக்கப்பட்டுள்ள ஜாதக உண்டியலில் போட வேண்டும். மற்றொன்று கொண்டு வந்தவர்களிடமே கொடுக்கப்படும்.

    அதன்படி இதுவரை இந்த கோவிலுக்கு வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 90 நாளில் திருமணம் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. நோய் நீங்க வேண்டும், இன்னும் பல்வேறு காரியங்களை நினைத்துக்கொண்டு வருபவர்களுக்கும், அவர்களின் எண்ணங்கள் ஈடேறி வருவதாக இங்கு வரும் பக்தர்கள் தெரிவித்து வருகிறார்கள். இந்தக் கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பூஜைகள் நடைபெற்றாலும் ஆடி மாத பவுர்ணமியில் நடைபெறும் பூஜை தான் திருவிழா போல கொண்டாடப்படுகிறது.

    தஞ்சையில் இருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, பள்ளியூர். இந்த ஊருக்கு தஞ்சையில் இருந்து திருவாரூர் செல்லும் வழித்தடத்தில், சாலியமங்கலத்தில் இருந்து பாபநாசம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும். இந்த தடத்தில் களஞ்சேரியில் இருந்து பள்ளியூருக்கு சாலை பிரிகிறது. இந்த சாலையில் இருந்து 1½ கி.மீ. தூரம் கிழக்கு நோக்கிச் சென்றால் ஆலயத்தை அடையலாம்.

    • இங்கு வழிபாடு செய்தால் வீடு கட்டும் பணி எந்தவித தடையும் இன்றி விரைவில் வீட்டை கட்டி முடிக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    • இந்த தலத்துக்கு வந்தாலே சனி தோஷம் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருப்புகலூரில் பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது.

    நாற்புறமும் அகழி சூழ அமைந்திருக்கும் இந்த கோவிலில் அருளும் இறைவன் அக்னீஸ்வரர், இறைவி கருந்தார்க்குழலி. சூளிகாம்பாள் என்ற பெயரும் இறைவிக்கு உண்டு.

    இத்தல இறைவியின் பெயர் கருந்தாள் குழலி. இங்கு சாயரட்சை காலத்தில் அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபாடு செய்யப்படுகிறது. திருமணத்தடை உள்ளவர்கள், அம்பாளுக்கு வெள்ளை புடவை சாத்தி வழிபட்டால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டுவதாக இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    இத்தலத்தில் நிகழ்கால நாதர் என்னும் வர்த்தமானீஸ்வர், கடந்தகால நாதர் பூதேஸ்வரர், எதிர்கால நாதர் பவிட்ச்சேயேஸ்வர் ஆகியோரும் உள்ளனர். இவர்களை வழிபட்டால் முற்பிறவியில் ஏற்பட்ட பாவங்கள் தோஷங்கள் நீங்கி நிகழ்காலத்தில் கிடைக்க வேண்டிய நன்மைகள், வருங்காலத்தில் கிடைக்க வேண்டிய அனைத்து செல்வங்களையும் பெற்று நலமுடன் வாழலாம். அப்பர் பெருமான் உழவாரப்பணி செய்து கொண்டிருந்தபோது இறைவனடி சேர்ந்த திருத்தலம் இதுவாகும்.

    புதிதாக வீடு கட்டுபவர்கள் திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலுக்கு வந்து அக்னீஸ்வரர் சன்னிதிக்கு நேர் எதிரில் 3 செங்கற்களை வைத்து பூஜை செய்து இறைவனை வழிபட்டு எடுத்து செல்கின்றனர். இவ்வாறு பூஜை செய்த 3 செங்கற்களை வடகிழக்கு, தென்கிழக்கு பகுதிகளிலும், பூஜை அறையிலும் வைக்க வேண்டும்.

    இவ்வாறு செய்தால் வீடு கட்டும் பணி எந்தவித தடையும் இன்றி நாம் விரும்பியபடி விரைவில் வீட்டை கட்டி முடிக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த வாஸ்து பூஜை இத்தலத்தின் அனைத்து நாட்களிலும் செய்யப்படுகிறது.

    இந்த தலத்துக்கு வந்தாலே சனி தோஷம் நீங்கிவிடும் என்பது ஐதீகம்.

    திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவிலுக்கு சென்னையில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் சென்னையில் இருந்து நாகப்பட்டினம் வந்து அங்கிருந்து நாகூர், திட்டச்சோி, திருமருகல் வழியாக கோவிலை அடையலாம். நாகப்பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து 24 கி.மீட்டர் தொலைவில் உள்ள கோவிலை அடையலாம். தென்மாவட்டங்களில் இருந்து வர விரும்பும் பக்தர்கள் வேளாங்கண்ணி செல்லும் பஸ்சில் ஏறி நாகப்பட்டினத்தில் இறங்கி கோவிலை அடையலாம்.

    • இங்கே உள்ள தீர்த்தம் கல்யாண தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது
    • ஆயில்ய நட்சத்திரத்தன்று இங்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

    திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது உறையூர் கமலவல்லி நாச்சியார் திருக்கோயில். கேட்டவர்க்கு கேட்டதையெல்லாம் வழங்கி அருளும் வரப்பிரசாதி என்று கமலவல்லி நாச்சியாரைப் போற்றுகின்றனர் பக்தர்கள்.

    அரங்கன் என்கிற பரமாத்மாவை, கமலவல்லி எனும் ஜீவாத்மாவாக இருந்து, மன்னருக்கு மகளாக் அவதரித்து, திருமணம் புரிந்து கொண்டவளின் திருக்கோயில் இது. உறையூர் மன்னனின் இளவரசியாக மகாலக்ஷ்மியே அவதரித்த ஒப்பற்ற பூமி இது என்கிறது ஸ்தல புராணம்.

    இங்கே கல்யாண விமானம் எனப்படும் கமல விமானத்தில் கோயில் கொண்டு தன்னை நாடி வருவோருக்கெல்லாம் அழகு ததும்பத் தரிசனம் தந்துகொண்டிருக்கிறார் கமலவல்லி நாச்சியார். வெளியூர் அன்பர்களுக்கு, இது கமலவல்லி நாச்சியார் கோயில். கமலவல்லித் தாயார் கோயில். ஆனால், உள்ளூர்க்காரர்கள், திருச்சிவாசிகள்... நாச்சியார்கோயில் என்றுதான் சொல்லுகிறார்கள்.

    இங்கே உள்ள விமானம் கல்யாணவிமானம் என்பது போல் இங்கே உள்ள தீர்த்தம் கல்யாண தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. சூரிய புஷ்கரணி என்றும் போற்றப்படுகிறது.

    கமலவல்லி நாச்சியாரின் திருநட்சத்திரம்... ஆயில்யம். எனவே மாதந்தோறும் ஆயில்ய நட்சத்திரத்தன்று விசேஷ பூஜைகளும் சிறப்பு வழிபாடுகளும் விமரிசையாக நடைபெறுகின்றன. அதேபோல், பங்குனி உத்திரப் பெருவிழாவின் போது, ஆயில்ய நட்சத்திர நாளில், ஸ்ரீரங்கத்தில் இருந்து அரங்கன் இங்கே உறையூர் நாச்சியார்கோயிலுக்கு வருவார். அப்போது இருவருக்கும் திருமண வைபவம் சீரும் சிறப்புமாக நடைபெறுகிறது.

    இந்த திருமண வைபவத்தை நேரில் வந்து தரிசித்துப் பிரார்த்தனை செய்துகொண்டால், விரைவில் கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம். அதேபோல், மாதந்தோறும் ஆயில்ய நட்சத்திரநாளில், கமலவல்லி நாச்சியாரை மனமுருக வேண்டிக்கொண்டால், ஆயில்ய நட்சத்திரக்காரர்கள் தாயாரை ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்தால், அவர்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும். காரியத்தில் இருந்த தடைகள் அனைத்தும் விலகும். வழக்கில் வெற்றிகிடைத்து இனிதே வாழ்வார்கள் என்பது உறுதி என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    ஆயில்ய நட்சத்திர நாளில், நாச்சியார்கோவில் கமலவல்லி நாச்சியாரை வீட்டில் விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வேண்டிக்கொண்டால், சர்க்கரைப் பொங்கல் அல்லது புளியோதரை நைவேத்தியம் செய்து, இயலாதவர்களுக்கு உணவு வழங்கினால், பிரிந்த தம்பதி கூட விரைவில் ஒன்றுசேருவார்கள் என்பது ஐதீகம்.

    • திருச்சி உறையூரில் அழகுற அமைந்திருக்கிறது கமலவல்லி நாச்சியார் கோயில்.
    • அரங்கனையே கைப்பிடித்த பூரிப்புடனும் கனிவுடனும் அழகு ததும்பக் காட்சி தருகிறாள் தாயார்.

    ஊடல் இல்லாத உறவுகளே இல்லை. ஊடலும் அதற்குப் பிறகான சமாதானமும் இன்னும் புரிதலையும் நெருக்கத்தையும் பிரியத்தையும் ஏற்படுத்தும். இந்த ஊடல் இறைவனுக்குள்ளேயே நிகழ்ந்திருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டிருக்கும் ரங்கனுக்கும் தாயாருக்கும் நடந்த ஊடலும் அதன் பிறகான புரிதலும் விவரிக்கும் புராணம், நாம் அறிந்ததுதானே.

    அந்தக் காலத்தில் பரந்துவிரிந்த சோழ தேசத்தின் தலைநகரம் உறையூர். இந்தப் பகுதியில், நந்தசோழன் எனும் மன்னன் ஆட்சி செய்துவந்தான். குறைவற நல்லாட்சி புரிந்து வந்தான். இறைப்பணியிலும் ஈடுபட்டு, சிறந்த பக்திமான் என்று பேரெடுத்தான். ஆனால் என்ன, அள்ளியெடுத்துக் கொஞ்சி மகிழ, ஒரு வாரிசு இல்லை அவனுக்கு.

    திருமாலின் மீது மாறா பக்தி கொண்டிருந்த மன்னனின் மனநிலையை, ஏக்கத்தை அறியாமலா இருப்பார் மகாவிஷ்ணு? அவனின் பக்தியில் மகிழ்ந்த பரமன், தன் இல்லாள் மகாலக்ஷ்மியையே மன்னனுக்கு மகளென அவதரிக்கச் செய்தார். தாமரைத் தடாகத்தில், தாமரை மலர் மீது தங்கமென ஜொலித்த குழந்தையைக் கண்டான். குதூகலமானான். அரண்மனைக்குக் கொண்டு வந்தான். ராணியிடம் கொடுத்து மகிழ்ந்தான். நெகிழ்ந்து போனாள் அரசி. 'கமலவல்லி' எனப் பெயர் சூட்டி வளர்த்தார்கள்.

    உலகத்துக்கே நாயகியான மகாலக்ஷ்மி, சோழ தேசத்தின் இளவரசியாக வளர்ந்தாள். வலம் வந்தாள். தன் துணைவனான பரம்பொருளுடன் மகாலக்ஷ்மியும் சேரும் தருணமும் வந்தது.

    வேட்டைக்காரனைப் போல் வந்தான் அரங்கன். அதுவொரு பலாச வனம். அங்கே தன் தோழியருடன் இருந்த கமலவல்லி, அரங்கனைக் கண்டாள். அவனழகில் தேஜஸில் மயங்கினாள். மகளின் கலக்கத்தையும் வாட்டத்தையும் காதலையும் கண்டு செய்வதறியாது தவித்தான் மன்னன்.

    ஆட்டத்தை முடித்துக்கொள்ள திருவுளம் கொண்டான் அரங்கன். அன்றிரவு... மன்னனின் கனவில் அரங்கன் வந்தான். தன் தேவியையே மகளாக வளர்த்து வந்தாய் எனும் உண்மையைச் சொல்லியருளினார் அரங்கன். 'சந்நிதிக்கு அழைத்து வா' எனப் பணித்தார். இதைக் கேட்டு நெகிழ்ந்து போனான் மன்னன். திருவரங்கம் இருக்கும் திசை நோக்கி, நெடுஞ்சாண்கிடையாக விழுந்து நமஸ்கரித்தான்.

    விடிந்ததும் பரந்தாமனின் அருளுரைப்படி, மணமகள் போல் மகளை, மகாலக்ஷ்மியை அலங்கரித்து, அரங்கநகருக்கு ஊர்வலமாய் அழைத்து வந்தான். சந்நிதியில் நின்ற கமலவல்லியை, தனக்குள் ஐக்கியப்படுத்தி, மன்னனுக்கு அருளினார் அரங்கன். தன் பக்திக்கும் குணத்துக்கும் இறைவன் வழங்கிய கொடை என்று நெக்குருகிய மன்னன், உறையூர் வந்த கையுடன்... ஓர் ஆலயம் அமைக்கத் தீர்மானித்தான்.

    மகாலக்ஷ்மியே மகள் கமலவல்லியாக அவதரித்ததால், அவளின் நினைவாகவே ஆலயம் அமைத்தான் மன்னன். மகாலக்ஷ்மியை மகளாக வளர்த்தவனாயிற்றே. அரங்கனை தன் மாப்பிள்ளையாகவே பாவித்து பூஜித்தான். அதனால்தான், இங்கே உள்ள பெருமாளுக்கு அழகிய மணவாளன் என்றே திருநாமம் சூட்டி மகிழ்ந்தான். தாயாரின் திருநாமம்... சொல்லவா வேண்டும். கமலவல்லி நாச்சியார்.

    திருச்சி உறையூரில் அழகுற அமைந்திருக்கிறது கமலவல்லி நாச்சியார் கோயில். அரங்கனையே கைப்பிடித்த பூரிப்புடனும் கனிவுடனும் அழகு ததும்பக் காட்சி தருகிறாள் தாயார்.

    உரிய வயது வந்தும், இன்னும் திருமணமாகவில்லையே என்று கலங்கித் தவிப்பவர்களுக்கு, கமலவல்லித் தாயார் கல்யாண வரத்தைத் தந்தருள்கிறார். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில், மாதந்தோறும் வருகிற ஆயில்யம் நட்சத்திர நாளில், வீட்டில் விளக்கேற்றி சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து அக்கம்பக்கத்தாருக்கு வழங்கி, மனதார வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் அனைத்தையும் நடத்தித் தருவார் கமலவல்லித் தாயார்.

    தொடர்ந்து, கமலவல்லித் தாயாரை வணங்குங்கள். மணமாலை தோள் சேரும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    • செவ்வாய் தோஷம் உள்ளவர்களும் இந்த மாலையை அணியலாம்.
    • அனைத்து கிரக தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.

    ஈரோடு அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டைசுற்றி பாளையம் பைரவர் பீடம் விஜய் சுவாமிஜி, பொதுமக்களின் தொழில் வளர்ச்சி, குடும்ப நிம்மதி உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்காக சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறார். இவர் கருங்காலி மாலைகள் குறித்த அரிய தகவல்களை கூறி அதை பக்தர்களுக்கு அளித்து வருகிறார்.

    இதுபற்றி அவர் கூறியதாவது:-

    நம் வாழ்வில் மகத்தான மகிழ்ச்சியை கொண்டு வர நவக்கிரக நாயகரான செவ்வாய் பகவானின் ஆசீர்வாதம் மிக முக்கியம். அவரது ஆசீர்வாதத்தை பெற விரும்புபவர்கள் கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். செவ்வாய் பகவானுக்கு உரிய இந்த கருங்காலி மாலை அணிபவர்களுக்கு செவ்வாய் பகவான் அளிக்கும் அனைத்து பலன்களும் கிடைக்கும்.

    மேலும் எந்தவிதமான பிரச்சினைகளையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்டவர்களாக விளங்குவார்கள், மன உறுதி அதிகமாவதுடன், உடல் பிரச்சினைகள் நீங்கும். குலதெய்வ அருள் பெருகும். செல்வவளம் அதிகமாகும். எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். அனைத்து கிரக தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.

    மாங்கல்ய பலம் பலப்படும். செவ்வாய் தோஷம் உள்ள பெண்கள் இந்த கருங்காலி மாலையை அணிந்தால் தோஷம் நீங்குவதுடன், திருமண தடை நீங்கும். கணவன்-மனைவிக்குள் பிரச்சினைகள் இருந்தால் அந்த பிரச்சினைகள் அகன்று கணவன்-மனைவி உறவு மேம்படும்.

    பைரவ பீடத்தில் கருங்காலி மாலைகள் முறைப்படி பூஜை செய்யப்பட்டு, மந்திரங்களால் உரு ஏற்றி பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அணிந்து கொண்டால் தொழில் வளர்ச்சி அடையும். பொருளாதாரம் முன்னேற்றம் பெறும்.

    இவ்வாறு பைரவர் பீடம் விஜய் சுவாமிஜி கூறினார்.

    • ஏழரைச் சனி காலத்தில் நடைபெறும் திருமணம், மண வாழ்க்கை பாதிக்காது.
    • 30 வயதிற்கு மேல் ஆகியும் திருமணத்தை தள்ளி போடுகிறார்கள்.

    ஏழரை சனிக்கும் மனித வாழ்விற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. சனி பகவான் கொடுப்பதை தடை செய்யும் அதிகாரம் வேறு எந்த கிரகத்திற்கும் கிடையாது. பலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் போன்ற பல்வேறு சுப விஷயங்கள் நடைபெறுவது ஏழரைச் சனியின் காலத்தில் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. பல வருடங்களாக தடைபடும் திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற பல்வேறு சுப நிகழ்வுகள் இந்த காலகட்டத்தில் எளிமையாக நடந்து விடும்.

    ஏழரை சனியின் காலத்தில் தான் ஆணிற்கு குடும்பம் என்றால் என்ன? மனைவி குழந்தைகளுக்கு ஒரு மனிதன் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் என்ன? உழைப்பின் அவசியம், உழைப்பால் உயரும் நெறி முறை போன்ற பல்வேறு வாழ்க்கை தத்துவத்தை புரிய வைப்பார்? பெண்களுக்கு கணவர், புகந்த வீட்டாருடன் எப்படி அனுசரித்து வாழ்வது? கணவனின் பொருளாதாரத்தில் எப்படி குடும்பம் நடத்த வேண்டும், குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும் போன்ற பல்வேறு இல்வாழ்க்கை உண்மைகளை புரிய வைப்பார்.

    சுய ஜாதகத்தில் ஏழாமிடத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் தசா புக்தி சாதகமாக இருந்தால் ஏழரைச் சனி காலத்தில் நடைபெறும் திருமணம், மண வாழ்க்கை பாதிக்காது. தங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வரன் அமையாத காரணத்தால் ஏழரை சனியின் மேல் பழிபோடுகிறார்கள். அல்லது சுயவிருப்பு வெறுப்பு காரணமாக ஏழரை சனி வந்தால் திருமணம் செய்யக் கூடாது என 30 வயதிற்கு மேல் ஆகியும் திருமணத்தை தள்ளி போடுகிறார்கள். பல வருடங்களாக திருமணமே வேண்டாம் என்று கூறுபவர்களுக்கு கூட ஏழரை சனியின் காலத்தில் திருமணம் தானாக நடந்து விடும்.

    அஷ்டமச் சனியும் திருமணமும்

    ராசிக்கு எட்டாம் இடத்தில் நிற்கும் சனியின் ஏழாம் பார்வை இரண்டாமிடமான தனம்,வாக்கு, குடும்பஸ்தானத்திற்கு இருப்பதால் வாய் கொடுத்து மாட்டிக் கொள்பவரைப் போல தேவையற்ற வம்புக்கு சென்று தானே அதில் மாட்டிக் கொள்வர். அதாவது வம்பு, வழக்கு, தகராறில் ஈடுபடுதல், பிறர் விஷயங்களில் கலகம் செய்ய நினைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால், தனக்கு ஏற்பட வேண்டிய இன்பமான நிலையை தானே கெடுத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக் கொள்வார்கள்.மேலும் ஜனன கால ஜாதக ரீதியாக சாதகமற்ற தசை புத்தி நடப்பவர்களுக்கு தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத இடர்களை சந்திக்க நேரும் என்பதால் திருமணத்தை தவிர்ப்பது நல்லது.

    பரிகாரம்

    எனவே ஏழரை சனியின் காலத்தில் முயற்சித்தால் திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடி வரும்.ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஜனன கால ஜாதக ரீதியான சனி பகவானால் திருமணத் தடை இருப்பவர்கள், சரியான திருமண வாழ்வு அமையாமல் மன நிம்மதி இழந்து அல்லாடுபவர்கள் சனிக்கிழமை திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட திருமணத் தடை அகலும். திருமணத்திற்குப் பிறகு இல்லறம் நல்லறமாகும்.

    • குருவிற்கு இனிப்பு சுவை பிடிக்கும்.
    • சர்க்கரைப் பொங்கல் படைத்தும் வழிபடுவது நல்லது.

    திருமண வயதை எட்டும் ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு குரு பலம் வந்து விட்டதா என்று ஜோதிடரிடம் கேட்டு அதற்கேற்ப திருமணம் செய்வது பலரின் நடைமுறை வழக்கமாக இருக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் குரு பலம் வரவில்லை என்றால், அவரது திருமணத்தை தள்ளிப்போடுவதும் வழக்கமாக இருக்கிறது. ஆனால் 'குரு பலம் மட்டுமே திருமணத்தை தீர்மானிக்கிறதா?' என்றால், 'இல்லை' என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் திருமணமே செய்துகொள்ளாமல் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையில் எல்லாம் குரு பலம் வராமல் இருந்திருக்குமா?

    கோச்சாரப்படி ஒருவருடைய ஜாதகத்தில், அவரது ராசிக்கு 2, 5, 7, 9 ஆகிய இடங்களில் குரு பகவான் சஞ்சரிக்கும் போது, குரு பலம் ஏற்படுகிறது. அப்படி பார்த்தால், குரு பலம் ஏற்படும் வேளையில், திருமண வயதில் உள்ள அனைவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் அல்லவா? ஆனால் அப்படி நிகழ்கிறதா? என்றால், அது கேள்விக் குறிதான். ஏனெனில் அவரவர் பிறந்த ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்புகளின் படிதான் திருமணம் என்பது நடைபெறும்.

    எனவே குரு பலத்திற்கும், திருமணம் நடப்பதற்கும் சம்பந்தம் இல்லை. எப்படி என்றால், ஒரு ஜாதகருக்கு குரு பலம் சிறு வயதிலும் வரும், நடுத்தர வயதிலும் வரும், வயதான பிறகும் வரும். அப்படி இருக்கும்போது, குரு பலம் வரும்போதெல்லாம் திருமணம் நடைபெறுவதில்லைதானே. எனவே, திருமணம் நடைபெறும் காலம் என்று பார்க்கும் போது, அவரவர் ஜாதகத்தில் வரும் திசை, புத்தி, அந்தரத்தினைப் பொறுத்தே திருமணம் நடைபெறுகிறது.

    அதாவது ஜாதகத்தின் படி குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடம், களத்திர ஸ்தானமான ஏழாம் இடம் ஆகியவற்றில் வீற்றிருக்கும் கிரகம், களத்திரகாரகனான சுக்ரன் இருக்கும் இடத்தை பார்க்கும் கிரகம் போன்றவற்றைப் பொறுத்தே திருமணம் நடைபெறுகிறது. மேலும், திருமண ஸ்தானங்களான 2-ம் இடம், 7-ம் இடம், 9-ம் இடம் போன்ற இடத்தின் ஸ்தானாதிபதி சாரத்தில் கிரகங்கள் இருந்தாலும், அந்த கிரகங்களின் திசை, புக்தி காலங்களிலும் திருமணம் நடைபெறும். மேற்சொன்ன விதிகளின் படி குரு சம்பந்தம் பெறுமேயானால், அந்த குருவின் திசை, புத்தி காலங்களிலும் திருமணம் நடந்தேறும்.

    அப்படி என்றால் குருவால் என்னதான் பயன் என்கிறீர்களா?.. அதையும் பார்ப்போம்.

    புத்திரகாரகன், தனகாரகன், ஒழுக்கம், அறிவு விருத்தி அடைவது, உயர் பதவி யோகம் பெறுதல், மரியாதை, ஆசிரியன், ஆலோசனை வழங்குபவர் போன்ற காரகங்களின் அடிப்படையில் குரு பகவான் பலன் தருவார். குரு பார்க்க கோடி நன்மை என்பது அனைவருக்கும் தெரியும். குரு பகவான் இருந்த இடங்களை விட பார்க்கும் இடம் நன்மை அடையும். ஜாதகத்தில் நல்ல ஸ்தானங்களில் குரு பார்வை இல்லாதவர்கள், குரு பகவானிடம் சரணடைதல் மிகுந்த நன்மையைத் தரும்.

    அருகிலுள்ள சிவன் கோவிலுக்குச் சென்று குரு பகவானை தரிசிப்பது நல்லது. குருவிற்கு உகந்த நாள் வியாழன். அன்றைய தினம் குரு பகவானை உள்ளார்ந்து நினைத்து விரதம் மேற்கொள்ளும் போது, குருவின் அனுக்கிரகம் கிடைக்கும். குரு பகவானுக்கு உகந்த பொன்னிறம் அல்லது மஞ்சள் ஆடை அணிந்து குருவை வழிபட்டால், அவரால் ஏற்படும் தோஷங்கள் விலகி நன்மைகள் கிடைக்கப்பெறும். உதாரணமாக கல்வி விருத்தி அடைதல், உயர்பதவி கிடைத்தல், தனகாரகன் என்பதால் செல்வச்செழிப்பு அதிகரிக்கும்.

    புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் அல்லது புத்திர தோஷம் உள்ளவர்கள், குரு பகவானை வழிபடுவதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கொண்டைக் கடலையை மாலையாக கோர்த்து, குரு பகவானுக்கு அணிவித்தலும் மிகவும் நன்மையைத்தரும். குருவிற்கு இனிப்பு சுவை பிடிக்கும். ஆதலால் சர்க்கரைப் பொங்கல் படைத்தும் வழிபடுவது நல்லது. குரு ஸ்லோகம், குரு மந்திரம், குரு காயத்ரியை உச்சரிப்பதால், குருவின் அனுகிரகம் முழுமையாக நமக்கு கிடைக்கும். இவற்றை வியாழன் தோறும் 30 அல்லது 108 முறை பாராயணம் செய்வது நன்மையைத் தரும்.

    'ஜோதிடச்சுடர்' என்.ஞானரதம்,சென்னை.

    • ஏழில் ராகு இருப்பவர்களுக்கு  கவனமாக திருமணப் பொருத்தம்  பார்க்க வேண்டும்.
    • நட்சத்திரப் பொருத்தம் பார்க்காமல் கட்டப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.

    ஏழில் ராகு நிச்சயமாக திருமணத்தை தடை செய்ய மாட்டார். திருமணத்தை நடத்தி பிரச்சினையை தருவார். காதல் கலப்பு திருமணத்தால் பிரச்சினை தருவார். ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை நடத்தி பிரச்சினை தருவார். முதல் மனைவி இருக்கும் போதே சட்டத்திற்கு எதிராக இரண்டாம் திருமணத்தை தருவார்.

    தனித்த ராகுவும், குரு பார்வை பெற்ற ராகுவும் பெரிய தொந்தரவை தருவதில்லை. எனினும் தனித்த ராகு இருப்பவர்களுக்கு திருமண வாழ்வில் மாமியார், நாத்தனார் அல்லது நெருங்கிய உறவுகளின் தலையீட்டால் மண வாழ்வில் நெருடல் இருந்து கொண்டே தான் இருக்கும்.

    ஆண் ஜாதகத்தில் சுக்கிரன் ராகு சேர்க்கையால் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்கள் திருமண வாழ்வில் இருப்பார்கள். பெண் ஜாதகத்தில் செவ்வாய் ராகு சேர்க்கை இருப்பவர்களுக்கு கணவரிடம் இருந்து கிடைக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் உரிமைகள் கிடைக்காததால் பிரச்சினை பிரிவினையை ஏற்படுத்துகிறது. சந்திரன் ராகு சேர்க்கை இருக்கும் ஆண்கள் மனைவியை தேவைக்கு மட்டும் பயன்படுத்துவார்கள்.

    சனி ராகு சம்பந்தம் கர்ம பந்தத்தால் இணைந்து கர்ம வினையை கழிக்க முயன்று கர்ம வினையை அதிகப்படுத்துபவர்கள். ஏழில் ராகு இருப்பவர்களுக்கு  கவனமாக திருமணப் பொருத்தம்  பார்க்க வேண்டும். நட்சத்திரப் பொருத்தம் பார்க்காமல் கட்டப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்ய வேண்டும். சென்ற பிறவியில் தம்பதிகளுக்குள் இருந்த நிறைவேறாத ஆசையின் பிரதி பலிப்பாக இப்போதைய வாழ்வு அமையும்.

    பரிகாரம்

    கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதிகளை சேர்ந்து வாழ வைக்க முயற்சி செய்வது மிகச் சிறந்த பரிகாரம்.

    பஞ்சமி திதியில் கருட வழிபாடு செய்ய வேண்டும்.

    தினமும் ராகு வேளையில் துர்க்கை அல்லது காளியை வழிபட வேண்டும்.

    நாகர்கோவில் நாகராஜா கோவில் சென்று வழிபட வேண்டும்.

    ×